Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

வைகாசித் திருவிழா

Vaigasi Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

ஸ்ரீ மந்த குமார சுவாமி கோயில் திருவிழா என்பது நாட்டார் வழிபாட்டுத் திருவிழா என்பதால் தமிழ்ப் பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிள்ளையார் நத்தம், பனையூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் இந்தத் திருவிழாவில் கூடுகின்றனர். பல்வேறு சமூகங்கள் இணைந்து இந்தத் திருவிழாவில் பங்கேற்பதால் ஒரு சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இத்திருவிழா துணை புரிகிறது.


நடைபெறும் இடம்

ஸ்ரீ மந்தகுமார சுவாமி கோயில்


நடைபெறும் தருணங்கள்

வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை


ஊர்

தமிழ்ப் பாடி

மாவட்டம்

விருதுநகர்

பாலினம்
ஆண்
விழாவின் வரலாறு / கதை

இக்கோயிலில் உள்ள ஸ்ரீ மந்தகுமாரசுவாமிக்கு, விருதுநகர் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மகாலிங்க மலைதான் பூர்வீகம் எனக் கூறுகின்றனர். அங்குள்ள ஒரு மரத்தில் மந்தகுமார சாமி தோன்றினாராம். அப்போது அங்குச் சென்ற இப்பகுதி பக்தர்கள் அந்த மரத்தை எடுத்து வந்து திருச்சுழியில் உள்ள பூமிநாதன் கோயிலில் வைத்தனர். ஆனால் சிவன் கோயிலில் இந்த மரத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம். எனவே மந்தகுமார சுவாமி, தன் பக்தர் ஒருவர் கனவில் அருள் பாலித்து ”எனக்கான இடம் இது அல்ல, என்னைத் திருச்சுழி அருகே இருக்கும் தமிழ்ப் பாடியில் கொண்டு வந்து சேருங்கள். அங்குள்ள மக்கள் என்னை வழிபடுவார்கள்” என்றும் கூறினாராம். இதனால் மந்தகுமார சுவாமியை இங்கே எழுந்தருளச் செய்து இவ்வூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அன்று முதல் பல ஆண்டுகளாக இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது என்கின்றனர் ஊர்மக்கள்.

விழாவின் தொன்மை
இவ்வூர் மக்களின் கருத்துப்படி சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் திருவிழா நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
விரத முறைகள்

திருவிழா தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக இக்கோயிலின் பூசாரியே காப்புக் கட்டி நோன்பு இருக்கிறார். மற்றவர்கள் நோன்பிருக்கும் நடைமுறை இங்கு இல்லை.

பலியிடல்
விழாவின் போது 150 ஆடுகள் பலியிடப்படுகின்றன. அவை அனைத்தும் பக்தர்களால் நேர்த்திக்கடனாக இக்கோயிலுக்கு வழங்கப்பட்டவை ஆகும். விழாவின்போது இவை வெட்டப்பட்டு அனைவருக்கும் அன்னதானமாக வழங்கப்படுகின்றன. இந்த அன்னதானத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு உணவருந்துகின்றனர். பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
நேர்த்திக்கடன்
குழந்தைப் பிறப்பு, குழந்தைகள் படிப்பு, பேய் பிசாசு உள்ளிட்ட பயத்திலிருந்து விடுபடுதல், நோய்களிலிருந்து விடுபடுதல், குடும்ப ஒற்றுமை, வசதி வாய்ப்புள்ள வாழ்க்கை, கால்நடை பல்கிப் பெருகல் போன்ற வேண்டுதல்களூக்கான நேர்த்திக்கடன்கள் இங்குச் செலுத்தப்படுகின்றன. எந்த நேர்த்திக்கடனையும் பக்தர்கள் தனி ஆளாக வந்து செலுத்துவதில்லை. திருவிழாவின்போது மட்டுமே தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த முடியும்.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
வள்ளித் திருமணம் நாடகம், இசை நடன நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறுகின்றன.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
சிறப்பு நிகழ்வான கிடாய் வெட்டுக்கு முந்தைய நாள் திருவிளக்குப் பூசை நடைபெறும்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

அழகுராஜா

அழகுராஜா

அழகுராஜா

காணொலி

அழகுராஜா