Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கரியமாலழகர் கோயில்

Kariyamalazhagar Temple

கோயிலின் வேறு பெயர்

வெங்கடபெருமாள்


பிற தெய்வத்தின் பெயர்கள்

ஸ்ரீதேவி, பூதேவி


தலத்தின் சிறப்பு

இக்கோயில் திருக்கற்றளி. பிற்காலப் பாண்டியர்களின் கலைப்பாணியைக் கொண்டு விளங்குகிறது.


ஊர்

பந்தல்குடி

மாவட்டம்

விருதுநகர்

மூலவர் பெயர்
கரியமாலழகர்
ஆகமம்
பாஞ்சராத்திரம்
பூசைக்காலம்
காலை 6 மணிக்கும் மாலை 5 மணிக்கும் கோயில் நடை திறக்கப்படுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, பௌர்ணமி போன்ற நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்புப் பூசைகள் நடத்தப்படுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டில் பூ, பழம், தேங்காய், வாசனைத் திரவியங்கள், பொங்கல் இட்டுப் படைக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு / பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு
கருவறையின் பின்புறம் தாங்குதளத்தில் பட்டிகை மற்றும் ஜகதி பகுதிகளில் - கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. சடையவர்மன் குலசேகர பாண்டியனின் 13ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் திருக்காவணத்தில் ஊரார் கூடித் தருமகனேரி போன்ற பகுதிகளைப் பெருமாள் கோயிலுக்குத் திருவிடையாட்டமாக வழங்கிய செய்தி காணப்படுகிறது. இத்தருமகனேரியின் கீழெல்லையாகச் சமணப் பள்ளிக்கு வழங்கப்பட்டிருந்த பள்ளிச்சந்த நிலம் இருந்துள்ளதையும் குறிக்கிறது. மேலும் இப்பெருமாள் கோயிலுக்குத் திருநந்தவனமும் இருந்துள்ளது என்று கல்வெட்டுகளின் மூலம் தெரிகிறது.
சிற்பங்கள்
கரியமாலழகர், ஸ்ரீதேவி, பூதேவி, கருடன் ஆகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இராஜகோபுரத்தில் பல சுதையுருவங்கள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
விமானத்துடன் கூடிய கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், மகாமண்டபம், கருடமண்டபம், இராஜகோபுரத்துடன் நுழைவு வாயில் ஆகியன காணப்படுகின்றன.
சுருக்கம்
பிற்காலப் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கரியமாலழகர் திருக்கோயிலில் ஐந்துநிலை இராஜகோபுரமும் இரண்டு அடுக்கு விமானமும் காணப்படுகின்றன. முகமண்டபத்தின் முகப்பின் கூரைப்பகுதியில் திருமாலின் பத்து அவதாரத் திருவுருவங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இக்கற்றளியின் அதிட்டானத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறையின் வெளிப்புறத்தில் கடவுள் உருவங்கள் அற்ற தேவகோட்டங்கள் காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் இறைவன் ’கரியமாலழகர்’ என்ற பெயரில் இப்போது அழைக்கப்பட்டாலும் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் இவ்விறைவனுக்குத் ’திருமேற்கோயில் ஸ்ரீ குலசேகர விண்ணகர எம்பெருமான்’ என்ற பெயரே வழங்கப்பட்டுள்ளது. இப்பெயரை வைத்துப் பிற்காலப் பாண்டிய மன்னனாகிய சடையவர்மன் குலசேகரபாண்டியனின் பெயரில் இக்கோயில் எழுப்பப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இப்போதுள்ள பெருமாள் கோயிலில் பழைய கோயிலின் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனைக்கொண்டு இவ்வூரின் பழைமையைக் கணிக்க முடிகிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
செட்டிக்குறிச்சி சிவன் கோயில்
செல்லும் வழி
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் முதன்மைச் சாலையில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பந்தல்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
பந்தல்குடி, அருப்புக்கோட்டை
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.