Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

வடமலை நாச்சியம்மன் கோயில்

Vadamalai Nachi Amman Temple

கோயிலின் வேறு பெயர்

வடமலை ஆச்சியம்மன் கோயில்


அமைவிடம்

போடிநாயக்கனூருக்கு வடக்கு பக்கமாக உள்ள அம்மன் சோலை என்ற இடத்தில் உள்ளது.


மூலவர் பெயர்

வடமலை நாச்சியம்மன்


ஊர்

போடிநாயக்கனூர்

மாவட்டம்

தேனி

பூசைக்காலம்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வெள்ளிக் கிழமையில் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
சிறு தெய்வ வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறது. இங்கு ஆடு மற்றும் கோழி பலியிடப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
சிற்பங்கள்
ஏழு கன்னிமார், கருப்புசாமி, முனியாண்டி மற்றும் விநாயகர் சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
பலகாலம் முன்பு இப்பகுதியில் வாழ்ந்த செல்லியன்–பொன்னி என்ற தம்பதியினருக்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லாமல் இருந்தது. இத்தம்பதினர் வடமலை நாச்சி அம்மனிடம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டினர். அதன் பயனாக அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஒருநாள் இப்பகுதியில் விறகு சேகரிக்க, இத்தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் சென்றனர். அப்போது வடமலை நாச்சி அம்மன் கோயில் அருகே குழந்தையை விட்டுவிட்டு, விறகு சேகரிக்க சென்றுள்ளனர். ஆனால், கோயில் அருகே விளையாடிக்கொண்டிருந்த தங்கள் குழந்தையை மறந்து வீட்டிற்கு திரும்பிவிட்டனர்.

வீட்டிற்கு திரும்பிய தம்பதியினர், தங்கள் குழந்தையை நாச்சியம்மன் கோயில் அருகே விட்டுவந்ததை நினைவுபடுத்திக்கொண்டு, அதனை அழைத்துவர மீண்டும் கிளம்பினர். ஆனால் அதற்குள் இரவு நேரமாகிவிட்டது. அவர்கள் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. பிறகு வடமலை நாச்சியம்மன் கோயில் அருகே அந்தக் குழந்தை அம்மனுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டனர். தங்கள் குழந்தையை ஒப்படைத்துவிடுமாறு வேண்டியுள்ளனர். அதற்கு வடமலை நாச்சியம்மன், ”இப்பகுதியில் இரவு நேரக் காவல் நான்தான்; எனவே எந்தப் பொருளையும் இரவில் எடுத்துச் செல்ல முடியாது. காலையில் வந்து உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லலாம்" என்று கூறியுள்ளார். அதற்கு பொன்னி, தொடர்ந்து வாதிட்டு, "என் குழந்தை இப்பொழுதே எனக்கு வேண்டும்" எனக் கேட்டார். அதற்கு நாச்சி அம்மன், "என் அருளால் உங்களுக்கு கிடைத்த குழந்தை இது. ஆகையால், அதை நான் பாதுகாப்பேன்" என்று கூறினார். இதற்கும் பொன்னி மறுத்ததால், கோபமடைந்த நாச்சி அம்மன், குழந்தையின் குடலை உருவி மாலையாக அணிந்து கொண்டு, உடலை தூக்கி எரிந்தார் என்ற செவிவழி கதை இப்பகுதி மக்களிடையே இன்று வரை சொல்லப்பட்டுவருகிறது.
கோயில் அமைப்பு
கருவறைக்கு மேல் விமானமும், கருவறைக்கு முன்பு ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகில் மூன்று சந்நிதிகள் கொண்ட அமைப்பும், மேடை போன்ற அமைப்பும் காணப்படுகின்றன. மேடையின் மேல் அரிவாள், கருப்புசாமி, முனியாண்டி, ஏழு கன்னிமார் மற்றும் பிற கிராம தெய்வ சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
வடமலை நாச்சியம்மன் இப்பகுதியின் காவல் தெய்வமாக மட்டுமல்லாமல் போடிநாயக்கனூரில் உள்ள பலரின் குலதெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகிறார்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இதன் அருகிலேயே போடிநாயக்கனூர் அரண்மனை, பரமசிவன் கோயில், பெருமாள் கோயில், சிவன் கோயில் மற்றும் பொது ஆண்டு 9- 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் உள்ளது.
செல்லும் வழி
போடிநாயக்கனூரில் இருந்து வடக்கு பக்கம் உலக்குருட்டி சாலையில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
போடிநாயக்கனூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
போடிநாயக்கனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
போடிநாயக்கனூர்
புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்